Saturday, 17 November 2018

தமிழ் நாடு வாகன தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் காட்டிக்கொடுப்பு

The kiss of death: Stalinists seek to tie Tamil Nadu auto strikes to right-wing parties

அழிவை ஏற்படுத்தும் செயல்: தமிழ் நாடு வாகன வேலைநிறுத்தங்களை வலதுசாரி கட்சிகளுடன் பிணைக்க ஸ்ராலினிஸ்டுகள் முயற்சி

By Arun Kumar
10 November 2018
மஹா இந்தியா மற்றும் ராயல் என்ஃபீல்ட் மோட்டார்-சைக்கிள் தயாரிப்பு ஆலைகள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு செய்யும் Myoung Shin India Automotive (MSI) ஆகியவற்றை சேர்ந்த மூவாயிரம் தொழிலாளர்கள் ஆறு வாரங்களுக்கு மேல் ஓரகடத்தில் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வெளிப்புறத்தில் உள்ள ஒரு தொழிற்துறை மையமாக உள்ளது.
போலீஸின் வன்முறை தாக்குதல்கள், பரந்தளவிலான கைதுகள் மற்றும் நீதிமன்றங்களின் முதலாளிகள் சார்பான தீர்ப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் ஒரு உறுதியான போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள், மேம்பட்ட வேலை நிலைமைகள், அதிக ஊதியங்கள் மற்றும் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக யமஹாவால் பழிவாங்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தல் மற்றும் மூன்று ஆலைகளிலும், இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (CITU) இணைந்த புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களை அங்கீகாரம் செய்வது ஆகியவற்றிற்காக போராடுகின்றனர்.
சிஐடியு, இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் உடன் இணைந்துள்ளது.
தமிழ்நாடு வாகன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளர்களின் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும். அது, முதலாளிகள், அரசாங்கம், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களை ஒன்றுபடுத்தும் தொழிலாளி விரோத இணைவுக்கு எதிராக உடனடியாக எழுந்துள்ளது.
வேலைநிறுத்தக்காரர்களை தடைசெய்ய, நீதிமன்றங்கள் மற்றும் போலீசார் ஒன்றாக செயல்படும்போது, ஸ்ராலினிச சிஐடியு தலைவர்கள் ஓரகடத்தில் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்கின்றனர்.
வேலைநிறுத்தம் செய்யும் யமஹா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் MSI தொழிலாளர்களுக்கு ஆதரவாக, வேலைநிறுத்தம் நடைபெறும் ஆலைகளுக்கு எதிரே ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பதை தவிர, ஒரு பெரிய வாகன தயாரிப்பு மையமாக விளங்கும் ஓரகடத்தில் அது பிரதிநிதித்துவம் செய்யும் இதர தொழிலாளர்களை அணிதிரட்ட ஸ்ராலினிச சிஐடியு எதுவுமே செய்யவில்லை, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதுமாக எதுவுமே செய்யவில்லை என்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை.
வேலைநிறுத்தத்தின் போது உற்பத்தியை தொடர்ந்து நடத்துவதற்கு நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை பயன்படுத்துகிறது. ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவது ஒரு மூலோபாய விஷயமாக இருந்தபோதிலும், அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சார்பாக அல்லது ஒரு வர்க்கரீதியான ஆதரவு கேட்டு அறைகூவல் விடுப்பதையும் சிஐடியு எதிர்த்தது. பல தசாப்தங்களாக, ஒப்பந்த தொழிலாளர் மற்றும் பல அடுக்கு உழைப்பு சக்திகளை (ஒப்பந்த, தற்காலிக, பயிற்சி மற்றும் பகுதி நேரம் போன்ற தொழிலாளர்களை) தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வலிந்த தாக்குதலில் ஒரு முக்கிய ஆயுதமாக இந்திய பெருவணிகம் பயன்படுத்தி வருகிறது.
மாறாக, இந்திய ஆளும் கட்சியான, இந்து மேலாதிக்க பிஜேபி இன் ஒரு நெருங்கிய கூட்டாளியான அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கம், மற்றும் அஇஅதிமுக கட்டுப்பாட்டிலான தொழிலாளர் துறைக்கும் நேரடியாக (தலையீட்டிற்கான) விண்ணப்பங்கள் செய்யும்படி ஸ்ராலினிஸ்டுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை ஊக்குவித்தனர். அதேபோல், முதலாளித்துவ நீதிமன்றங்களின் மீது அவர்களை நம்பிக்கை வைக்கும்படியும் அவற்றின் கட்டளைகளுக்கு கட்டுப்படும்படியும் கூறினார்கள்.
வேலைநிறுத்தங்களை தடம்புரளச் செய்யவும் மற்றும் அவற்றை முதலாளித்துவ ஆளும் மேல் தட்டுடன் பிணைப்பதற்குமாக மேற்கொண்டுள்ள மேலும் ஒரு முயற்சியாக, CITU சமீபத்தில் ஒரு "அனைத்துக் கட்சி" கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது, அதில் ஸ்ராலினிஸ்டுகள் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களை அணிவகுத்து நிறுத்தி அவர்களை வேலைநிறுத்தம் செய்பவர்களின் கூட்டாளிகளாக புகழ் பாடியது.
யமஹா, ராயல் என்ஃபீல்ட், எம்.எஸ்.ஐ. வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக சிபிஎம் மற்றும் சிஐடியு தலைவர்களுடன் மேடையில் பின்வருபவர்கள் உட்பட பங்கு பெற்றனர்: தமிழக சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வின் மாவட்ட செயலாளர், கே. சுந்தர், தி.மு.க.வுடன் இணைந்திருக்கும் தொழிலாளர் முன்னேற்ற முன்னணி பொதுச் செயலாளர் எம். சண்முகம்; மற்றும் பெரும் வணிக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பிரிவான இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (INTUC), மாநில துணை செயலாளர் பி. தாமோதரன். மேலும் MDMK, PMK மற்றும் VCK உட்பட பல தமிழ்நாடு சார்ந்த முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்கள், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு வாகனத் தொழிலாளர்களின் ஆதரவாளர்களாக காட்டப்பட்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய சி.பி.எம். தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.சவுந்திரராஜன், வாகனத் தொழிலாளர்கள் போராட்டம் "மாற்றப்பட்டுவிட்டது" என்றும், அது இப்போது "அனைத்து (எதிர்க்கட்சி) அரசியல் கட்சிகளுக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது" என்றும் கூறினார்.
அவ்வாறான கூற்றுக்கள், யமஹா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் MSI தொழிலாளர்கள் போராட்டத்தின் மீது ஒரு சேதத்தை உண்டு பண்ணும் செயலின்றி வேறில்லை.
மேற்கூறிய அனைத்து கட்சிகளும் கடந்த இரு தசாப்தங்களில் இந்தியாவின் பில்லியனர் கோடீஸ்வரர்களின் அதிவேக வளர்ச்சிக்கு அதாவது 2 இலிருந்து 130 க்கும் அதிகமானவர்களாக வளர்ச்சி பெற்றதில் முடிவடைந்த தொழிலாள வர்க்க விரோத, முதலீட்டாளர் சார்பு செயல் திட்டத்திற்கு தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்தவர்கள். அதே சமயம் நூறு மில்லியன் (கோடி) கணக்கானவர்கள் நாளொன்றுக்கு 2 டாலர் (சுமார் 150 ரூபா) வருமானத்தில் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலம் வரையில் இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்க கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி, 1991 மற்றும் 1996 க்கு இடையில் இந்தியாவை ஆட்சி செய்தபோது சந்தை-சார்பு சீர்திருத்தங்களைத் தொடங்கி, அவற்றை முடுக்கி விட்டு, 2004 -14 வரையில் UPA அரசாங்கத்திற்கு அது தலைமை தாங்கியபோது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பூகோள மூலோபாய பங்காளித்துவத்தை உருவாக்கியது.
அதேபோல் தமிழ்நாடு ஆளும் கட்சியாகவும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி தலைமையிலான மத்திய அரசாங்கங்களில் ஒரு இளைய பங்காளியாகவும் தி.மு.க. இருந்த இரண்டு சமயங்களிலும் அது தொழிலாள வர்க்க விரோதப் பதிவுகளை கொண்டுள்ளது. சிறிய பிராந்தியக் கட்சிகள் பெரு வணிக தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு. வின் கீழ் இயங்கும் கட்சிகளாக மற்றும் அனைத்து இந்திய அரசியல் அரங்கில் முறையே அவர்களின் பங்காளிகளாகவும் உள்ளன.
CPM-CITU இன் "அனைத்து கட்சி" கூட்டம் இரட்டை பிற்போக்குத்தன நோக்கம் கொண்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக தாம் அணிதிரட்டல் செய்வதாக உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் மீது அரசியல் கட்டுப்பாட்டை வைத்திருக்க ஸ்ராலினிஸ்டுகள் முயற்சிக்கின்றனர், அதே சமயம் அவர்களை மேலும் வர்க்கப் போராட்டத்தில் இருந்து விலகச் செய்கின்றனர். மற்றும் இரண்டாவதாக ஸ்ராலினிஸ்டுகள் அடுத்த வசந்தகால தேசியத் தேர்தலுக்கான தயாரிப்புக்களில் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு அணியை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அவர்களது தேசிய மாநாட்டில், ஸ்ராலினிஸ்டுகள் உடன்பட்டார்கள், அதாவது பி.ஜே.வை தோற்கடிக்கும் பெயரில், அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் "புரிதலை" ஏற்படுத்திக் கொள்ள தயாராக உள்ளனர், அதேசமயம் அது ஒரு நவீன தாராளவாத, அமெரிக்க ஏகாதிபத்திய சார்புடைய கட்சி என்பதையும் அது பல்வேறு பிராந்தியக் கட்சிகளுடன் நெருக்கமான கூட்டுக்களை உருவாக்கும் என்பதையும் ஒப்புக் கொள்கின்றனர். தி.மு.க. அதுவாகவே காங்கிரஸ் இன் ஒரு நெருக்கமான கூட்டாளியாக இருக்கிறது, அது ஸ்ராலினிஸ்டுகளின் மிக முக்கியமான வருங்கால தேர்தல் பங்காளிகளில் ஒன்றாகும்.
அக்டோபர் 6 -8 தேதிகளில் நடைபெற்ற CPM இன் மத்திய குழு கூட்டத்தில் இந்த நோக்குநிலை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இது வரவிருக்கும் தேர்தலில் கட்சிக்கு மூன்று பணிகளை அறிவித்தது; "இடது" சக்திகளை பலப்படுத்துவது, பி.ஜே.பி யை தோற்கடிப்பது, மற்றும் "ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம்" அமைவதை உறுதிப்படுத்துவது - அதாவது காங்கிரஸ் கட்சி தலைமையிலான அல்லது இதர வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கம் ஒன்று ”மத்தியில் அமைவது.”
அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற "அனைத்துக் கட்சி" கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் இதர மாநிலங்களில் இதேபோன்ற கட்சிகளுக்கு பின்னால் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை திசைதிருப்புவதே இப்படியான இலக்குகளின் மையமாக உள்ளது: காங்கிரஸ், தி.மு.க. மற்றும் பிற சாதி அடிப்படையிலான மற்றும் பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கு ஆற்றொணா நிலையில் தேவைப்படும் "இடது" சான்றுகளை வழங்கி அவர்கள் ஓட்டுகள் வாங்குவதற்கும் மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளே ஸ்ராலினிஸ்டுகள் தங்களது சொந்த செல்வாக்கை அதிகரிக்கவும் ஆகும்.
முக்கியமாக, வேலைநிறுத்தங்கள் எந்தளவுக்கு நீடித்து செல்கிறதோ அவ்வளவு அதிகமாக CITU, இதர அனைத்துக்கும் மேலாக தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான கோரிக்கையை உயர்த்திப் பிடித்தது, அதேசமயம் இந்தியாவின் முதலாளித்துவ சார்பு தொழிலாளர் உறவு முறையை அது கடைப்பிடிப்பதாக வலியுறுத்தியது. இந்த செய்தி தவறின்றி உள்ளது: முதலாளிகள், CITU ஐ அங்கீகரித்தால், சிஐடியு மற்றும் சிபிஎம் தேசிய ரீதியாக செய்வதுபோல் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும்.
இது தொடர்பாக இரண்டு மேலதிக புள்ளிகள் சொல்லப்பட வேண்டும்:
அக்டோபர் 30ம் திகதி "அனைத்து கட்சி" கூட்டத்தில் –தெளிவாகவே வேலைநிறுத்தத்தில் உள்ள ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த CITU மறுத்து வருவது தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியிலிருந்து வரும் அழுத்தத்தின் கீழ்– ஸ்ராலினிச தலைவர் சவுந்திரராஜன் ஆவேஷமாக சாடினார், அவ்வாறு பேசும் போது வேலைநிறுத்தக்காரர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்றவாறாக கூறினார், “ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு போகவேண்டாம் என்று சொல்வதோ அல்லது அவர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பதோ” என்று கூறிய சவுந்திரராஜன் “அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் அது நிறைய தள்ளு முள்ளுக்கும் இரத்த சிந்தலுக்கும் வழிவகுக்கும். இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா” என்றார். சவுந்திரராஜன்
இரண்டாவதாக, ஸ்ராலினிசத் தலைவர்கள், வட இந்தியாவில் ஹரியானாவில் உள்ள மாருதி சுசுகியின் மானேசர் வாகன தயாரிப்பு ஆலையில் தொழிலாளர்களுக்கு எதிரான அரசு – முதலாளியின் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பாக தமிழ் நாடு வாகன தொழிலாளர்களை முற்றிலும் அறியாமையில் வைத்திருந்தனர். 2012 ல் மாருதி சுசுகி, ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி மாநில அரசாங்கம் மற்றும் பொலிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட 150 தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினர், 2,400 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தனர். ஏனென்றால், மானேசர் ஆலை தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர் முறை மற்றும் வறுமை ஊதியத்திற்கு எதிரான எதிர்ப்பின் ஒரு மையமாக மாறியது. இன்று, மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் அனைத்து 12 நிர்வாக குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 13 தொழிலாளர்கள், ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் குற்றவாளிகளாக்கப்பட்ட பின்னர் ஆயுள் சிறை தண்டனையை எதிர் கொண்டுள்ளனர்.
மாருதி சுசுகி சோடிக்கப்பட்டதைப் பற்றி தமிழ் நாடு வேலைநிறுத்தக்கார்கள் அறிந்து கொள்வதை இரண்டு காரணங்களுக்காக ஸ்ராலினிஸ்டுகள் விரும்பவில்லை: முதலாவதாக, பெருவணிக அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக செயல்பட வைக்கமுடியும் என்ற அவர்களின் கூற்றுக்களுக்களை துடைத்துக்கட்டும் வகையில் நிராகரித்துள்ளது. இரண்டாவதாக, மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்புக்கு எதிரான எந்தவொரு பிரச்சார இயக்கமும் அவர்களது காங்கிரஸ் மற்றும் பிற முதலாளித்துவ அரசியல் கூட்டாளிகளுக்கு கோபத்தை உருவாக்கும்.
இந்தியத் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எழுச்சி மற்றும் அதன் ஒரு பகுதியாக தமிழ் நாடு வாகன வேலைநிறுத்தங்கள், ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிஐடியுவை இந்திய முதலாளித்துவத்தின் சமூக முட்டுகளாக அம்பலப்படுத்த வேண்டியதன் அவசரத்தை வெளிச்சத்தில் காண்பிக்கிறது. அத்துடன் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தை பலப்படுத்த வேண்டும். அதாவது, தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக திட்டமிட்ட முறையில் அணிதிரட்டுவதும், அதன் பின்னால் இந்திய முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான போராட்டத்தில் உழைக்கும் மக்களையும் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டி தொழிலாளர் அரசாங்கத்திற்காகவும் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும் போராட வேண்டும்.
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/kiss-n15.shtml

Saturday, 3 November 2018

“நடுத்தர வர்க்கம் ஒரு முற்போக்கான வர்க்கமல்ல”

“Middle Class is not a progressive class”


டேவிட் நோர்த், டெய்லி மிரர் நேர்காணலில்
மெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், லியோன் ட்ரொட்ஸ்கியையும் மற்றும் அவரது சர்வதேசியவாதத்தின் மீது தனது சித்தாந்த அடித்தளத்தைக் கொண்ட நான்காம் அகிலத்தின் தத்துவார்த்த தலைவருமான டேவிட் நோர்த், டெய்லி மிரர் பத்திரிகையுடனான உடன் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். புத்தக ஆசிரியரும் சர்வதேச சோசலிஸ்டுமான அவர் பல தரப்பட்ட விடயங்கள் குறித்து பேசினார், அவற்றின் தொகுப்பு கீழே பதிவிடப்படுகிறது.
  • கவானோவிற்கான எதிர்ப்பு அவரது உண்மையான தீமைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததில்லை.
  • ஆதரவுகுறைந்த நிலைப்பாடுகளைப் பாதுகாப்பதும் அவ்வாறு பாதுகாத்தது சரியே என நிரூபணமாவதும் வரலாற்றில் நிறைய இருக்கின்றன.
  • விரைவான தீர்வுகளைத் தேடி எங்களது கோட்பாடுகளை நாங்கள் ஒருபோதும் காட்டிக்கொடுத்ததில்லை.
கேள்வி: டேவிட், உங்களை இந்த நேர்காணலுக்கு வரவேற்கிறோம், இது மாதிரியான ஒரு நேர்காணல் இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். தொடக்கக் கேள்வியாக, இலங்கையின் “இடது” அதாவது சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து பேசும்போது, அவர்கள் தத்துவத்தில் தான் குறியாக இருக்கிறார்கள் என்பது முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஒரு தத்துவமானது இலங்கையில் பரந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் தோல்வி கண்டு வந்திருக்கிறது. அந்த செய்தி அவர்களுக்கு சென்று சேர்ந்திருக்கவில்லை என்பதை நீங்கள் உணர முடியும். நாம் இடது என்று கருதுகின்றவர்கள் ஏன் இன்னும் தத்துவார்த்தக் குமிழியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: நீங்கள் கேள்வியை முன்வைக்கும் விதத்தை நான் வெளிப்படையாகவே விமர்சனத்துடன் அணுக வேண்டியிருக்கிறது. அது ஒருவர் அரசியலை எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்பதில், அரசியலுக்கும் தத்துவத்திற்குமான உறவை எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்திருக்கிறது. நான் இப்படிச் சொல்கிறேன். நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த தத்துவம் பற்றி விரிவுரைகளை நடாத்துவதற்காகத் தான் நான் இலங்கை வந்திருக்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியைக் கட்டியெழுப்புவதென்பது மிகவும் சிக்கலானதொரு நிகழ்ச்சிபோக்கு. அது, ஒரு தொழிலதிபர் விடுதியைக் கட்டுவது போன்றதல்ல. ஒருவர் அரசியலைக் கையாளும்போது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட மிக மிக சிக்கலான நிகழ்ச்சிபோக்குகளை அவர் கையாளுகிறார். எழுகின்ற புறநிலை நிகழ்ச்சிபோக்குகளையும், பரந்த மக்களின் அரசியல் அனுபவம் தொடர்பான விடயத்திலான வெவ்வேறு தாக்கங்களையும் கூட ஒருவர் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது, எம்மை பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டு தான் வரலாற்றில் மிகவும் புரட்சிகரமானதாகும்.
அதனை உலகப் புரட்சியின் நூற்றாண்டு என்றும் நீங்கள் சொல்லலாம். பாரிய சோசலிச இயக்கம் தொழிலாள வர்க்கத்தை தழுவிக் கொண்டிருந்தது.
சந்தேகத்திற்கிடமின்றி ரஷ்யப் புரட்சிதான் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வு ஆகும்.
அக்டோபர் புரட்சியும், போல்ஷிவிக்குகள் அதிகாரத்துக்கு வந்து வரலாற்றின் முதன்முதல் தொழிலாளர் அரசு நிறுவப்படுவதில் முடிவடைந்ததும் ரஷ்யாவை உருமாற்றி சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்ததுடன் மட்டுமல்ல அது தீவிரமான உலகளாவிய பின்விளைவுகளையும் கொண்டிருந்தது. அரசியல் உலகெங்கிலும் மாற்றம் கண்டது. இது உலக சோசலிசப் புரட்சியின் தொடக்கமென போல்ஷிவிக்குகள் நம்பினார்கள், பல அடிப்படையான அம்சங்களில், அவர்களின் நம்பிக்கை சரியானதாகவே இருந்தது.
பரந்துபட்ட மக்கள் ஸ்தாபக அரசியல் கட்சிகளுடன் மோதலுக்குச் செல்லவிருக்கிறார்கள் என நாங்கள் நம்புகிறோம், எமது வேலை அதனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இப்போது அது உத்தரவாதமான வெற்றி அல்ல என்றாலும் அது ஒரு முன்னோக்கிய பாதையை காட்டுகிறது.
இருந்தும், நூற்றாண்டின் முடிவுவாக்கில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு விட்டிருந்தது என்பதை அறிவோம். பாரிய சமூகப் புரட்சிக்குள் சென்ற சீனாவும் முதலாளித்துவத்தின் மீட்சிக்குள் சென்றது என்பதையும் அறிவோம்.
இது எவ்வாறு விளக்கப்பட முடியும்? அதாவது பரந்துபட்ட மக்கள் குறித்து நீங்கள் கேட்கிறீர்களாயின், அவர்கள் இப்போதுள்ள உலகமான, பாரிய சமத்துவமின்மையும் சொத்து ஒரு மிகச்சிறு உயரடுக்கிடம் குவிந்திருப்பதாகவும் இருக்கின்ற உலகுடன் அதிகமான அளவில் அதிருப்தியுற்று இருக்கின்றனர். இருந்தாலும் சோசலிச இயக்கத்தின் தலைவிதி குறித்த புரிதலின்றி எப்படி அவர்கள் சோசலிசத்தை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியும்?
அதைக் குறித்த எந்த விவாதமும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் தலைவிதியை முன்கொண்டு வருகிறது. அது இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரம்மாண்டமான அரசியல், தத்துவார்த்தப் போராட்டமாக இருந்தது. உலகின் சோசலிசப் புரட்சியில் இருந்து தனிமைப்பட்டு தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியெழுப்பி விட முடியும் என்று கூறியதொரு அதிகாரத்துவத்தின் பிரதிநிதியாக ஸ்ராலின் அதிகாரத்துக்கு வந்தார். 1917 இல் போல்ஷிவிக் புரட்சிக்கு வழிவகுத்திருந்தவற்றுக்கு நேர்மாறாக இருந்த இந்த கொள்கைகளில் இருந்து பிறந்தவை உலகெங்கிலும் சோசலிசத்தின் தலைவிதியுடன் பிணைந்து கொண்டன. இது நாடு மாற்றி நாடாக தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுகரமான தோல்விகளை உருவாக்கியது.
ஜேர்மனியில் பாசிசம் அதிகாரத்துக்கு வந்தது, உலகப் போர் வெடித்தது. தொழிலாள வர்க்கம் பாரிய தோல்விகளை சந்தித்தது. அந்த சமயத்தில், ட்ரொட்ஸ்கிசம் ஒரு சில நாடுகளில் மட்டுமானதாக, ஒரு சிறு சிறுபான்மையாக இருந்தது. ஆயினும், நான்காம் அகிலம் தனக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த முன்னோக்கினை புறநிலை நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன. ஆகவே இந்த படிப்பினைகளை விளக்குகின்ற, அவற்றை உட்கிரகிப்பதன் மூலமாக ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப இயலுகின்ற ஒரு வரலாற்று நிலைப்பாடு முக்கியமானதாகும். இவை சிக்கலான பிரச்சினைகள் ஆகும். இது புரட்சிக்கு திரும்பக் கொடுக்கும் செய்தி என்ன? தொழிலாள வர்க்கத்திற்கு அதை திரும்பக் கொண்டுவரப் போகின்ற ஆற்றல்மிக்க சக்திகள் என்ன? நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகப் பொருளாரத்தின் அடிப்படையான புறநிலை சக்திகளும் அரசியல் சக்திகளது நிலைமுறிவும் தான்... அவையாகும்.
கேள்வி: ஆனால் நீங்கள் கூறுகின்ற இந்த அத்தனை புறநிலை சக்திகளும் அதற்கு நேரெதிரானதற்கு வழிவகுத்துக் கொண்டிருப்பதைத் தானே நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். வலதுசாரி இயக்கங்களின் எழுச்சியை மற்றும் அவை உலகெங்கிலும் பூகோளமயமாக்கலின் நிராகரிப்பை?
பதில்: முதலில் நாம் இங்கு பார்த்துக் கொண்டிருப்பது அடிப்படையாக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியை ஆகும். முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலைமுறிவையை நாம் இப்போது கண்ணுற்றுக் கொண்டிருக்கிறோம். இதுவே நான்காம் அகிலத்தின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்தது, ஏனென்றால் அச்சமயத்தில் பேரிடருக்கு இட்டுச் சென்ற முதலாளித்துவ ஜனநாயகம் பாதுகாக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது. ஆயினும் நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலாளித்துவ ஜனநாயகத்தின் முறிவு என்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு ஆழமான மற்றும் அடிப்படையானதொரு நோயின் ஒரு வெளிப்பாடே ஆகும்.
இப்போது, வலதுசாரிகள் எவ்வாறு வேகம் பெற்றுக் கொண்டிருக்கின்றன? ஏனென்றால் “இடது இயக்கங்களாக” கூறப்பட்டவை உண்மையாகவே இடதுகளாக இல்லாத காரணத்தால்; இது உண்மையில் அடிப்படையாக தொழிலாள வர்க்கத்தை கைவிட்டிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் கைவிட்டிருக்கின்ற அத்துடன் அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் அரசியலைக் கையிலெடுத்திருக்கின்ற கட்சிகள் அனைத்தின் மீதுமான ஒரு குற்றப் பத்திரிகையாகவே இருக்கிறது. அடையாள அரசியலை பிரச்சாரம் செய்கின்ற சமூக அடுக்கை பகுப்பாய்வு செய்து பார்த்தால், அது உண்மையில் நடுத்தர வர்க்கத்தின் அரசியலாகவே இருக்கிறது. அவர்கள் உண்மையாகவே தொழிலாள வர்க்கத்தின் பிரச்சினைகளைப் பற்றி கவனமெடுப்பதில்லை. அமெரிக்காவில் நிலைமையை எடுத்துப் பாருங்கள்.
ட்ரம்ப் எப்படி அதிகாரத்திற்கு வந்தார்? ஒரு முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் தொழிலாள வர்க்கத்துக்கென எந்த வேலைத்திட்டமும் இல்லை, அது சந்தைப் பொருளாதாரத்திற்கும் அமெரிக்காவின் இராணுவவாதத்திற்குமே ஆதரவளிக்கின்றது.
போர் சீனாவுடன் புரிய வேண்டுமா அல்லது ரஷ்யாவுடனா என்பதுதான் டொனால்ட் ட்ரம்ப்புடன் அவர்களுக்கு இருக்கும் ஒரே கருத்துவேறுபாடாகத் தெரிகிறது. தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளைக் குறித்து எவரொருவரும் பேசுவதில்லை. வேலைவாய்ப்பின்மை, சமூக சமத்துவமின்மை குறித்து அவர்கள் எங்கே பேசுகிறார்கள்? இந்த வெற்றிடத்தை வலதுசாரி கூறுகள் சுரண்டிக் கொள்கின்றன. பாலின அரசியலை இடதுகள் பேசுகின்ற ஒவ்வொரு சமயமும், அவர்கள் பேசுவது நடுத்தர வர்க்கங்களது பிரச்சினைகளை என்பதால், அது தங்களுக்கே உதவிகரமாக ஆகிறதென்று, ஸ்ரீவ் பானன் சமீபத்தில் கூறினார்.
பிரட் காவனோ (Brett Kavanaugh) குறித்த சர்ச்சையை எடுத்துப் பாருங்கள். அவர் முற்றிலும் கடுமையான ஒரு பிற்போக்குவாதி, சித்திரவதை வேலைத்திட்டத்தை வடிவமைக்க உதவியவர், வலதுசாரி அரசியல்வாதிகளில் மிகமோசமான வகையைச் சேர்ந்தவர். ஆனாலும் ஜனநாயகக் கட்சியினர் 35 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த அல்லது நடந்திராத ஒரு சம்பவம் குறித்த குற்றச்சாட்டை வைப்பதற்கு ஏன் தெரிவுசெய்தனர். ஏன் அவர்கள் அதனைச் செய்ய வேண்டும்? ஏனென்றால் ஆழமான வர்க்க காரணிகளின் அடிப்படையில் கவனாவை எதிர்ப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்திற்கு அவர்கள் கோரிக்கை விடவில்லை. மாறாக அதி ஜனநாயக விரோதமான ஒரு பாலியல் அரசியலில் மூழ்கிக் கிடக்கும் ஒரு உயர்-நடுத்தர வர்க்கத்து அடுக்கிடம் அவர்கள் விண்ணப்பம் செய்து கொண்டிருந்தனர். அது பரந்த மக்களுக்கு கோரிக்கை விடுகின்ற ஒரு அரசியல் அல்ல.
போர் சீனாவுடன் புரிய வேண்டுமா அல்லது ரஷ்யாவுடனா என்பது தான் டொனால்ட் ட்ரம்ப்புடன் அவர்களுக்கு இருக்கும் ஒரே கருத்துவேறுபாடாக இருப்பதுபோல் தெரிகின்றது. தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளைக் குறித்து எவரொருவரும் பேசுவதில்லை.
கேள்வி: மறுபடியும் எனது அடிப்படைக் கேள்விக்கு திரும்புகிறேன், ஏன் உங்களது மார்க்சிச, லெனினிச சக்திகள் இன்று பரந்த மக்களை ஈர்க்க முடியாதிருக்கிறது?
பதில்: கடந்த ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் நாங்கள் மிகப்பெருமளவுக்கு உள்நுழைந்திருக்கிறோம். அத்தனை பெரிய சக்திகளிடம் இருந்துமான தொடர்ச்சியான தடைகளைத் தாண்டியும் உலக சோசலிச வலைத் தளம் உலகின் மிகவும் பரவலாக வாசிக்கப்படுகின்ற ஒரு வெளியீடாக இருக்கிறது. ஒரு உலகளாவிய பார்வையாளர்களுக்கு நாங்கள் பொறுப்பேற்று வந்திருக்கிறோம், இன்னும் அது பாரிய எண்ணிக்கையாகவில்லை தான் என்றாலும் வருங்காலத்தில் அது அவ்வாறு ஆகும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை. 30 வருடங்களாக தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களால் அடக்கப்பட்டு வந்திருக்கிறது.
தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுயாதீன இயக்கத்தையும் தடுப்பது என்பது ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காக இருக்கிறது. இப்போது 30 ஆண்டுகளில் முதல்முறையாக, வர்க்கப் போராட்டத்தில் ஒரு மீளெழுச்சியையும் தொழிலாள வர்க்கம் தீவிரப்பட்டு செல்வதையும் நீங்கள் காணமுடியும். அமெரிக்காவில் சூழ்நிலை மிகவும் முரண்பாடான ஒன்றாக இருப்பதை நீங்கள் அறியலாம். பேர்னி சாண்டர்ஸ் என்ற நபரை எடுத்துப் பாருங்கள், எனது கண்ணோட்டத்தில் அவர் ஒரு சோசலிஸ்ட் அல்ல, ஆனால் அவர் அரசியல் புரட்சி குறித்து பேசுகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அவர் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் டொனால்ட் ட்ரம்ப்பை எளிதாக தோற்கடித்திருப்பார், ஆனால் ஜனநாயகக் கட்சிக்கு எந்த உருப்படியான சீர்திருத்த வேலைத்திட்டத்திலும் ஆர்வமில்லை என்பதால் அவர் வேட்பாளராகவில்லை. ஆயினும் அவர் பெருமளவில் திசைதிருப்பும் ஒன்றாக இருந்தார், ஏனென்றால் அவர் ஜனநாயகக் கட்சி என்ற ஒரு பெரும் கட்சியை சார்ந்தவராக இருந்தார். சமூக நிகழ்ச்சிப்போக்குகள் மிகவும் சிக்கலானவை என்பதை உங்களுக்கு காட்டுவதற்காகவே இதை எழுப்பினேன், சோசலிசத்தை நோக்கி எந்த அனுதாபமும் இருக்காது என்று கருதப்பட்டு வந்திருக்கின்ற நிலமான அமெரிக்காவில், சோசலிஸ்டாக தன்னை சொல்லிக் கொள்கின்ற ஒரு மனிதரால் அவர் பெற்ற அளவுக்கான ஆர்வத்தைத் திரட்டுவதற்கு இயன்றது. உண்மையில் அவர் ஒரு சோசலிஸ்டா அல்லது இல்லையா என்பது முற்றிலும் வேறொரு விடயம். இப்போதைய பிரச்சினை என்னவென்றால், சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி காணுகின்ற நிலையில், புதிய நிலைமைகள் எழும். நாம் இப்போது கண்டுகொண்டிருப்பது சமூக சக்திகளின் ஒரு மறுஅணிதிரளலாகும்; பழைய ஒழுங்குமுறை நொருங்கிக் கொண்டிருக்கிறது.
கேள்வி: இந்த இடத்தில் குறுக்கிடுகிறேன் டேவிட், எப்போதுமே இதுதானே கம்யூனிஸ்டுகளின் அழைப்பாக இருந்து வந்திருக்கிறது? புரட்சி தவிர்க்கமுடியாதது என்றும் வெகுவிரைவில் நடக்கவிருக்கிறது என்றும்; இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகமயமாக்க மேலாதிக்கத்தை தொடர்ந்து வந்த சமூக நிலைமைகள் அத்தியாவசியமாக சோசலிசப் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும்; இலங்கையில் கூட 60கள் மற்றும் 70களில் நடந்தவை நடக்கின்ற வரை, இதுதானே சுலோகமாக அல்லது நம்பிக்கையாக இருந்தது?
பதில்: அரசியல், தலைமையில் இருந்து சுயாதீனமாக அது தவிர்க்கமுடியாது நடந்தேறி விடும் என்ற அர்த்தத்தில் நீங்கள் சோசலிசம் தவிர்க்கமுடியாததா என்று கேட்கிறீர்களாயின், இல்லை சோசலிசம் தவிர்க்கமுடியாதது அல்ல. தவிர்க்க முடியாதது என்னவென்றால், முதலாளித்துவத்தை ஆளுகின்ற விதிகளின் செயற்பாடுகளின் மூலமாகவே முதலாளித்துவம் தீவிரமானதும் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதாகும். நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது வர்க்கங்களுக்கு இடையிலான, சமூக சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலின் சமூக நிகழ்ச்சிபோக்குகள் குறித்ததாகும். ஆளும் உயரடுக்கினர் அவர்களது குழப்பங்களில் இருந்து மீளுகின்ற வழிகளைத் தேடுவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். பிரச்சினை என்னவென்றால், முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளாக அவர்கள் காண விழைகின்ற தீர்வுகள் மனிதகுலத்திற்கு உதவுவதாக இல்லை, பொதுவாக பேரழிவுகரமான பின்விளைவுகளையே கொண்டதாய் இருக்கின்றன.
கேள்வி: ஏற்கனவே நாம் அதனை ஸ்தாபித்திருக்கிறோம்...
பதில்: ஆம் செய்திருக்கிறோம். ஆயினும் நாம் என்ன அனுபவத்தை பெற்றிருக்கின்றோம் என்றால், இப்போதிருக்கும் அமைப்புமுறையில் ஒரு குறுகிய நலனைக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகள், ஒரு உண்மையான சோசலிச இயக்கம் எழுந்து விடுவதைத் தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன. இப்போது புரட்சிகர சக்திகள் தாமாகவே இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியில் வருவதற்கான ஒரு வழியைக் காணுகின்ற முயற்சிக்கு முன்முயற்சி எடுத்தாக வேண்டியிருக்கிறது. 1990களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இது நடப்பதை நாங்கள் கண்டோம். இணையத்தை தழுவிக் கொண்ட முதன்முதல் வெளியீடுகளில் ஒன்றாக நாங்கள் இருந்தோம். எமது அமைப்பின் ஸ்தாபகம் தொடங்கி நாங்கள் பத்திரிகைகளை அறிமுகப்படுத்தி வந்திருக்கிறோம், இணையம் ஒரு பரவலான வாசகர்களை சென்றடைவதற்கான வாய்ப்பை வழங்கியதை நாங்கள் கண்டோம், ஆகவே அதனை கைகளில் எடுத்துக்கொண்டோம்.
கூகுளின் கடுமையான தணிக்கையை -அதனை நாங்கள் ஆவணப்படுத்தியிருக்கிறோம்- தாண்டியும், எங்களுக்கு உலகெங்கிலும் பரவலான வாசிப்பு இருக்கிறது. எங்களது வாசகர் எண்ணிக்கை இப்போதும் நீடிக்கிறது. பரந்த மக்கள் ஸ்தாபகமான அரசியல் கட்சிகளுடன் மோதலுக்கு வரப் போகிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம், அதனை அடிப்படையாகக் கொண்டே எங்களது வேலைகள் அமைந்திருக்கின்றன. அது உத்தரவாதமான வெற்றியை இப்போது காட்டவில்லை என்றாலும் கூட ஒரு முன்னோக்கிய வழியை அது காட்டுகிறது. இரண்டு காரணிகளை நாங்கள் கணக்கில்கொள்கிறோம். ஒன்று, முதலாளித்துவ அபிவிருத்தியின் புறநிலைக் காரணிகள், இரண்டாவது அந்தக் காரணிகள் இப்போது நாம் கண்ணுற்றுக் கொண்டிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கலில் சென்று முடியவுள்ளது.
இந்த அமைப்புமுறைக்குள்ளாக, சோசலிச அமைப்புமுறையிலான ஒரு புதுப்பித்த ஆர்வம் வரவிருக்கிறது. ஒரு போராட்டம் அதன் பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்பதை தொழிலாளர்கள் ஏறக்குறைய உள்ளுணர்வுரீதியாக புரிந்துகொள்கின்றனர். ஆர்ப்பாட்டம் செய்து விட்டு பின் வீட்டுக்குப் போய் ஒரு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்ற ஒரு நடுத்தர வர்க்க மாணவரின் கண்ணோட்டமல்ல இது. வேலைகளும், வாழ்க்கைகளும் ஆபத்தில் இருக்கின்றன என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு அரசியல் கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கட்சி எவ்வாறு தன் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது? முதலாவதாய் அதற்கு போராடுவதற்கு திறமிருக்கிறது, ஒரு சரியான வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்கு திறமிருக்கிறது என்பதை விளங்கப்படுத்துவதன் மூலமாகவும், அத்துடன் அதன் வரலாற்றில் அது கோட்பாடுகளைத் தாங்கிப் பிடித்து வந்திருக்கிறது என்று விளங்கப்படுத்துவதன் மூலமாகவும். ஆகவே இப்போது அமெரிக்காவில் மேலும் மேலும் அதிகமான மக்கள் எங்களது வேலைத்திட்டத்தில் ஆர்வம் கொள்வதை நாங்கள் காண்கிறோம்.
அவர்கள் ஒரு சோசலிசக் கட்சியுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை ஒரு வருடத்திற்கு முன்பாக அவர்களால் கற்பனை செய்தும் பார்த்திருக்க முடிந்ததில்லை என்று அவர்களில் பலரும் எங்களிடம் சொல்லியிருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது தெரியும், இந்த வாதத்தையும் நான் மிக அடிக்கடி கேட்டுமிருக்கிறேன், ஆனாலும் அரசியல் ஒரு மிக மிக சிக்கலானதொரு களம். நாங்கள் வெற்றிகரமாக இருந்திருக்கவில்லை என்று சொல்கிறீர்கள், நான் அதில் உடன்படவில்லை.
கேள்வி: அது ஒரு சிக்கலான நிகழ்ச்சிப்போக்கு என்ற உங்களது வாதத்தை ஏற்றுக் கொள்வோம். ஆனாலும் பரந்த மக்களிடம் நல்லபிப்பிராயம் பெறுகின்ற சக்திகளை உலகெங்கும் காண்கிறோம். என்னுடைய முக்கியமான சங்கடம் என்னவென்றால் கடுமையான இடதுகளிடம் இருந்தான தத்துவார்த்த தூய்மை மீதான வலியுறுத்தல். இப்போது கோர்பின் உதாரணத்தை, அல்லது பிரான்சில் மெலோன்சோன் உதாரணத்தை, இன்னும் சாண்டர்ஸின் உதாரணத்தையும் கூட எடுத்துப் பார்க்கலாம், அவர்கள் பரந்த மக்களிடம் ஈர்ப்பைப் பெற முடிந்திருக்கிறது. ஆனாலும் கூட, கடுமையான இடதுகள் தத்துவார்த்த தூய்மை மீதே தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருப்பதாக, அவர்களை நிராகரிப்பதாக தெரிகிறது. இலங்கையை எடுத்துப் பார்த்தீர்களென்றால் சோசலிச சமத்துவக் கட்சி எந்த வெற்றிகளையும் அடைந்திருக்கவில்லை. அதன் தூய்மை குறித்து உங்கள் முதுகை நீங்களே தட்டி பாராட்டிக் கொள்ளலாம், ஆனால் உண்மை என்னவென்றால் அவை எந்த வெற்றிகளையும் அடைந்திருக்கவில்லை.
பதில்: இந்த விவாதத்தை நான் வரவேற்கிறேன் என்பதை நான் சொல்லியாக வேண்டும். நான் மனம் புண்படவில்லை, இது மிக அடிப்படையான மற்றும் அதிமுக்கியமான பிரச்சினை. இடதுகளின் பிரச்சினை என்பது, தத்துவார்த்த தூய்மையைத் தவிர்ந்த வேறெதுவுமில்லை என்பதை முதலில் நான் தெளிவாக்க விரும்புகிறேன்.
சந்தர்ப்பவாதம் என்று சொல்லப்படுகின்றதான கோட்பாடற்ற கூட்டணிகளை ஸ்தாபிப்பது, ஒரு அரசியல் சூழ்நிலை குறித்த சரியான புறநிலை மதிப்பீட்டிற்கு பொருந்தியிராத எளிமையான மற்றும் துரிதமான தீர்வுகளை தேடுவது அதுவே உண்மையான பிரச்சினை. கோர்பின் அல்லது சாண்டர்ஸ் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பரந்துபட்ட மக்கள் தீவிரமயப்பட தொடங்கும்போது, பரந்துபட்ட மக்களின் கோபத்தை, இறுதியில் ஸ்தாபகத்திற்கு சவால் விடுவதாய் அமையாத அரசியல் பாதைகளில் திருப்பிவிடுகின்ற பாதுகாப்பு வழிமுறைகள் (safety models) எழத் தொடங்குகின்றன என்பது இப்போது நன்கறிந்ததாக இருக்கிறது.
பரந்துபட்ட மக்கள் அரசியலுக்குள் பெருமளவுக்கு தத்துவார்த்த அறிவை சுமந்து கொண்டு வருவதில்லை, அரசியல் வரலாறு அல்லது நிகழ்ச்சிபோக்குகள் குறித்த விழிப்பு இன்றியே வருகிறார்கள் என்று நீங்கள் சொல்வது சரிதான். பரந்த மக்கள் அவ்வாறு தொடங்குவதில்லை, அவர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றுக்காரர்களுக்கு தங்கள் விசுவாசத்தை கொடுக்கலாம். ஒரு மனிதர் புற்றுநோயால் தாக்கப்பட்டிருக்கும்போது அவர் ஏறக்குறைய எவர் சொல்வதையும் கேட்பதற்கு தயாரிப்புடன் இருப்பார். அத்துடன், வகைவகையான சிகிச்சைகளும் பிரபலமடைகின்றன. அவற்றின் பின்னால் போவது ஒரு நல்ல அரசியல் கட்சியின் கடமையாக இருக்காது. ஒரு ஸ்தூலமான உதாரணத்தை எடுத்துப் பார்ப்போம், சிரிசா (கிரேக்க இடது சாரி கட்சி) அரசியல் புரட்சியின் வாக்குறுதியுடன் வந்தது. நாங்கள் அதனை எதிர்த்தோம், சிரிசா மக்களை காட்டிக் கொடுக்கும் என்று முன்னராகவே நாங்கள் கூறினோம். அது நடந்தேற பல வருடங்கள் ஆகவில்லை, வாரங்களே பிடித்தது. அதன் பின்விளைவுகளை நாம் கண்டோம். ஜெரிமி கோர்பினும் அதேபோன்றதொரு இன்னொரு உதாரணம், அவர் தாக்குதலுக்கு உள்ளாகும்போது பதுங்குவதுதான் அவரது பிரதிபலிப்பாக இருக்கிறது. வலதுசாரிகள் தான் இப்போதும் தொழிற் கட்சியை (Labour Party) கட்டுப்படுத்துகின்றனர், அவர்கள் தான் எப்போதும் கட்டுப்படுத்துவார்கள். பரந்துபட்ட மக்கள், தங்களுக்கு தொடர்ச்சியாக கல்வியூட்டி தங்களின் நம்பிக்கையை வென்றெடுக்க விழைகின்ற ஒரு கட்சியின் ஊடாக கற்றுக் கொள்கின்ற சமயத்தில், அவர்கள் இந்த அனுபவங்களைக் கடந்து செல்கின்றபோது, தங்களின் தவறுகளின் ஊடாகக் கற்றுக்கொள்கின்றனர். நான் இப்போது உங்களிடம் முன்வைக்கும் கேள்வி என்னவென்றல், மாற்றீடு என்ன? என்பதுதான். ஏனென்றால் உங்கள் வாதத்தை நீங்கள் முன்வைக்கும்போது “உங்களால் தோற்கடிக்க முடியவில்லையா அப்படியானால் அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்” என்பது தான் அதற்கு அடிப்படையாக இருக்கிறது.
இப்போது இலங்கையில் உள்ள எமது சோசலிச சமத்துவக் கட்சித் தோழர்கள் குறித்து நீங்கள் சொன்னீர்கள், அவர்களை நான் பாதுகாத்தாக வேண்டும். அவர்கள் பரந்த மக்களின் நம்பிக்கையை இன்னும் வென்றெடுக்க முடிந்திருக்கவில்லை என்பது உண்மையே, ஆனால் அவர்களின் நிலைப்பாடுகள் என்னவாக இருந்து வந்திருக்கின்றன? அவர்கள் தமிழ் தேசியவாதத்தை எதிர்த்தனர், சிங்கள பேரினவாதத்தை எதிர்த்தனர். ட்ரொட்ஸ்கி ஒருமுறை சொன்னார், “மற்றவர்களுக்கு நாம் பொறுப்பெடுக்க முடியாது, நமக்கு மட்டுமே நாம் பொறுப்பெடுக்க முடியும்”. ஒரு கோட்பாட்டுரீதியான நிலைப்பாடு ஒரு குறுகிய நடைமுறைவாத பலனாக உடனடியாக மாற்றம்காணவில்லை என்ற உண்மையானது ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான வாதமாகி விடாது. நீங்கள் வரலாற்றில் திரும்பிப் பார்த்தால், 1914 இல் லெனின் போரை எதிர்த்தபோது அவர் ஒரு சிறிய சிறுபான்மையின் பகுதியாக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும், இப்போது நீங்கள் அதனை திரும்பிப் பார்த்தால், ஆதரவுகுறைந்த ஒரு நிலைப்பாட்டை பாதுகாப்பது அதிலும் ஒரு சிறுபான்மையில் இருந்து கொண்டு அதனைச் செய்வது என்ற என்ன ஒரு அரிய நிலைப்பாட்டை அவர் எடுத்தார் என்பதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப்பாருங்கள்.
நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது வர்க்கங்களுக்கு இடையிலான, சமூக சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலின் சமூக நிகழ்ச்சிபோக்கு குறித்ததாகும். ஆளும் உயரடுக்கினர் அவர்களது குழப்பங்களில் இருந்து வெளியேறுகின்ற வழிகளைத் தேடுவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். பிரச்சினை என்னவென்றால், முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளாக அவர்கள் காண விழைகின்ற தீர்வுகள் மனிதகுலத்திற்கு உதவுவதாக இல்லை, பொதுவாக பேரழிவுகரமான பின்விளைவுகளையே கொண்டதாய் இருக்கின்றன. 
கேள்வி: இந்த நேர்காணலின் ஆரம்பத்தில் நான் கேட்ட பதில் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை...
பதில்: அதை நான் சொல்லிக் கொண்டு தான் வந்திருக்கிறேன், நீங்கள் தான் செவிமடுத்திருக்கவில்லை....
கேள்வி: உள்ளூர் இயக்கங்கள் உண்மையான சர்வதேசியமயமானவையாக இருப்பதில் இருந்து வெகுதூரத்தில் இருக்கின்றன, முற்போக்கு அரசியலில் இருந்து வெகுதூரத்தில் இருக்கின்றன என்பது, நடுத்தர வர்க்கத்திடையே, குறைந்தபட்சம் இலங்கையிலேனும் என்று கூறலாம், மார்க்சிச-லெனினிச இயக்கங்களுக்கு எதிரான பிரதான வாதங்களில் ஒன்றாக இருக்கிறது. இடது என்று சொல்லப்படுவனவற்றின் சமீபத்திய போராட்டங்களை நீங்கள் எடுத்துப் பார்த்தீர்களென்றால், சர்வதேச அல்லது முற்போக்கு சித்தாந்தத்தின் அல்லது தொழில்நுட்பத்தின் மிக அடிப்படையானதொரு கூறு இல்லாதிருக்கிறது. இந்த வார்த்தையை பயன்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டும், ஆனால் அது உண்மையாக என்னவாய் இருக்கிறதென்றால், ஒரு உயிரினமாக நாம் அத்தனை முன்னேற்றங்களையும் கண்டிருக்கிற போதிலும், சோசலிசம் கிராமம் போன்ற ஒன்றாக இருக்கின்றது. இது எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: நீங்கள் பேசுவது, போலி இடது என்ற சர்வதேச நிகழ்வுப்போக்கின் இலங்கையிலான ஒரு வெளிப்பாட்டைக் குறித்ததாகும். ஃபிராங்க்பேர்ட் சிந்தனைப் பள்ளியின் ஒரு இழையாக அடையாளம் காணத்தக்க ஒரு போலி இடது குறித்து நான் பேசுகிறேன். அது அறிவொளியின் நிராகரிப்பில், விஞ்ஞானத்தின் நிராகரிப்பில் வேர்கொண்டதாகும். இன்று மார்க்சிசம் மேலாதிக்கம் செலுத்தவில்லை, பகுத்தறிவின்மைவாதத்தின் பல்வேறு வடிவங்களே; அவை முன்னேற்றத்திற்கு விரோதமானவையாக உள்ளன என்று நீங்கள் சொல்வது சரியே. நடுத்தர வர்க்கம் எப்போதுமே இந்த வகையான தத்துவங்களின் பக்கமே ஈர்த்துசெல்லப்படுகின்றது. ஏனென்றால் அவை ஒரு முற்போக்கான வர்க்கமல்ல, அவற்றிடம் ஒரு முன்னோக்கு கிடையாது. ஆகவே இந்த கருத்தியல்களைப் பற்றி புரிந்துகொள்வது முக்கியமானது என்று கருதுகிறேன்.
By Hafeel Farisz
17 October 2018
http://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/dnor-n03.shtml